பக்கங்கள்

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

யார் இவன்?

 
   அன்று எனக்கு விடுமுறை.

  சொந்த ஊருக்கு வந்திருந்தேன்.

  வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து
  என் பெற்றோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

  திடீரென்று எதிர்வீட்டுச் சிறுவன் உள்ளே நுழைந்தான்.

  என் அருகே அமர்ந்துக்கொண்ட அவன்
  பலவாறு கட்டளையிட்டான்.

  முதலாவதாக மின்விசிறியை போடச்சொன்னான்.

  அப்படியே செய்தேன்.

  அடுத்து டிவியை போடச்சொன்னான்.

  அதுவும் நடந்தேறியது.

  விட்டபாடில்லை அவன்.

  போகோ சேனலை வைக்கச்சொன்னான்.

  முகம் சுளிக்காமல் அவன் சொன்னபடி செய்தேன்.

  உடனே அவனிடம் கேட்டேன்,” டேய்!நீயா வந்து எனக்கு இவ்ளோ

  வேல சொல்றியே,நான் யார் தெரியுமா” என்றேன்.

  அதற்கு அவனுடைய பதில்.

  “ஓ! தெரியுமே.நீங்க அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்துட்டு போவீங்க” என்றான்.

  அப்படியே நான் அதிர்ந்துப் போய்,”டேய்! இது என் வீடு” என்றேன்.

  அதன் பிறகு அவன் என்னை சிறிதும் கண்டுக்கொள்ளவில்லை.

  போகோ சேனலின் கார்ட்டூன் பொம்மைகளில் லயத்துப்போனான்.

  ஆனால்,அவனுடைய செய்கைகள் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது.

  என் பெற்றோர் என்னிடம் ஏதோ கேட்க நான் அதில் மூழ்கிப்போனேன்.

  தற்செயலாக, டிவியில் போகோ சேனல் மியூட் ஆகிப் போனது.

  ஆம்.திரையில் ஒலியின்றி காட்சிகள் மட்டுமே தோன்றின.

  இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு என்று தெரியாமல்

  அந்த சிறுவனோ,” ஐயோ! காது கேட்கல.ஐயையோ!! எனக்கு காது கேட்கல.”

  என்று அழுது புலம்ப ஆரம்பித்து விட்டான்.

  ஒருவழியாக அவனை சமாதானப்படுத்தி அவன் வீட்டிற்கு அனுப்பிவைத்தோம்.

  நான் சற்றே மிரண்டு போயிருந்தேன் அவனுடைய செயலைக் கண்டு.

  இப்படி எந்த ஒரு சிறுவனாலும் பேசமுடியுமா?

  யோசித்துப் பார்க்க முடியவில்லை.

  எனக்கு அவனை மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க தோன்றியது.

  அவனுடைய வரவிற்காக நான் காத்திருந்தேன்.

  அடுத்த நாள் மதியம் மீண்டும் வந்தான் அந்த சிறுவன்.

  இம்முறை அவனை பரிசோதிக்க எண்ணி டிவிடி பிளேயரை டிவியுடன் இணைத்து

  ஒரு திரைப்படத்தை போட்டுவிட்டேன்.

  நாங்கள் அனைவரும் விறுவிறுப்பாக காட்சியை பார்ப்பது போல் நடித்தோம்.

  அவனும் எங்களுடன் சேர்த்து படம் பார்த்துக்கொண்டிருந்தான்.

  திடீரென்று...

  நான் ரிமோட் கன்ட்ரோலை எடுத்து வீடியோவை மட்டும் அணைத்துவிட்டேன்.

  ஸ்பீக்கரிலிருந்து ஒலியை அணைக்காமல் நாங்கள் அனைவரும் படம்

  பார்ப்பது போல் டிவி பெட்டியையே நோக்கிக்கொண்டிருந்தோம்.

  நான் எதிர் பார்த்தது போலவே நடந்தேறியது.

  ஆம் அவன் எங்கள் அணைவரின் முகத்தையுமே நோட்டமிட்டான்.

  நாங்கள் ஏதும் வெளிப்படுத்தாமல் இருந்தோம்.

  அவனிடம் மட்டும் ஏதோ ஒரு பதட்டம்.

  குழப்பத்துடன் என் அருகே வந்து என் காதைக் கடித்தான்.

  “மாமா! உங்களுக்கு படம் தெரியுதா?” என்றான்.

  “ஓ! நல்லா தெரியுதே” என்றேன்

  அவனுடைய கண்களில் மட்டும் கண்ணீர்.

  தனக்கு மட்டும் கண்ணு தெரியவில்லையோயென்று புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

  நான் அவனை மீண்டும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தேன்.

  அவன் எனக்குள் ஒரு மாறுபட்டவனாகவே தோன்றினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக