பக்கங்கள்

வெள்ளி, நவம்பர் 04, 2011

அதிர்ஷ்டம் இல்லாமல் போனால்...

என் மேசையிலிருந்து...

பல நாட்களாகவே எனக்குள் முரண்பாடாக தோன்றும் இரு தமிழ் வார்த்தைகள்.

1. அதிர்ஷ்டம்

2. வாய்ப்பு

வேறுபடுத்த முடியாமல் குழம்பியநாட்கள்  தான் அதிகம்.

உங்கள் பார்வையில் அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்பு, எப்படி?

இரண்டும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா?

என் சிந்தனை வசபட்ட இந்த நிகழ்வை கடந்த பிறகு உங்கள்
பதிலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு கிராமம்.

மக்களின் உள்ளம் கவர்ந்த ஒரு நிலக்கிழார்(ஜமீந்தார்).

அவருக்கு ஒரு அழகான மகள்(அனைத்து அம்சங்களுடன்).

அவளுக்கு அனைத்து வகையிலும் பொருந்தும் ஒரு சராசரி
குடும்பத்தை சேர்ந்த  இளைஞன்.

கால சக்கரத்தின் சுழற்சியால் அவள் அவன் கண்ணில் பட.

அவளை மணம் முடிக்க எண்ணினான்.

மறுகணமே அவனது கால்கள் நிலக்கிழார் முன் போய் நின்றது.

தன்  விருப்பதை வெளிப்படுத்தினான்.

ஒரு கணம் திகைத்தாலும், அவனுடைய தைரியத்தை கண்டு
சம்மதம் தெரிவித்தார்.

ஆனால்,ஒரு நிபந்தனையுடன்.

என்னவென்றால்...

அவர் வளர்க்கும் மூன்று காளை மாடுகளில் ஏதேனும் ஒன்றை அடக்கி அவனுடைய வீரத்தை நிரூபிக்க வேண்டும்.

அதாவது மூன்று வாய்புகள்.

இல்லையேல்...

அவனுடைய ஆசை நிறைவேறாது.

இவனும் ஏற்று கொண்டு தயார் ஆனான் அந்த தருணத்திற்காக.

அந்த நாள் வந்தது.

ஒரு பெரிய மைதானம்.

ஒரு புறம் இந்த இளைஞன்.

மறுபுறம் கொம்பு தீட்டப்பட்ட மூன்று காளை மாடுகள் ஒன்றன்
பின் ஒன்றாக  ஆக்ரோஷத்துடன்.

சுற்றிலும் கிராம மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன்.

மணி ஒலிக்க...

முதல் காளை இவனை நோக்கி விரைந்தது.

தனது மொத்த பலத்தையும் கையில் கொண்டு அதனை
எதிர்கொள்ள நினைத்தான்.

அதன் கூரிய இரு கொம்புகள் இவன் கண்ணில் பட, விலகி கொண்டான்  பயத்தில்.

முதல் வாய்ப்பை நழுவ விட்டான்.

இப்பொழுது...

இரண்டாவது காளை இவனை நோக்கி விரைந்தது.

சற்றே, அதிகமான பலத்துடன் அதனை எதிர்கொள்ள நினைத்தான்.

இம்முறை, அதன் சீரும் கண்கள் இவனை மிரள வைக்க,
விலகி நின்றான்.

இரண்டாவது வாய்ப்பையும் நழுவ விட்டான்.

அவன் மனம் பதைபதைத்தது.

அப்பெண்ணின் முகம் இவன் முன் வந்து சென்றது.

செத்தாலும் பரவா இல்லை, எப்படியாவது அந்த கடைசி
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கிறான்.

அதன்படி  சீறி வரும்  அந்த மூன்றாவது காளையை தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணி பாய்ந்து அதன் வாலை
பிடிக்க முற்படுகிறான்.

அவன் துரதிஷ்டம், அந்த காளைக்கு வால் இல்லை.

தோல்வியான முகத்துடன் விடைபெறுகிறான்.

இந்த நிகழ்வின்  வாயிலாக நான்  கூற முற்படுவது

என்னவென்றால்...

ஒவ்வொரு காளையும்  ஒரு வாய்ப்பு.

அதனுடைய வால் தான் அதிர்ஷ்டம்.

அவனுக்கு மூன்று வாய்புகள் கொடுக்கப்பட்டது.
  
முதல் இரண்டு காளைகளுக்கு வால் இருந்தன.

இவன் பயன்படுத்திக்கொள்ள  முற்படவில்லை.

வாலை பற்றி கொள்ள எண்ணியபோது,

அந்த காளைக்கு  வால் இல்லை.

இப்படி தான் நம்மில் பலர் இச்சமுதாயத்தில் அதிர்ஷ்டத்துடன்
கூடிய வாய்ப்புகளை பற்றி கொள்ள தெரியாமல்
ஓடிகொண்டிருக்கிறோம்.

நமது வாழ்நாளில்,நம் வீட்டுக்  கதவை   அவ்வப்போது பல வாய்ப்புகள் தட்டுவதுண்டு.

ஆனால்...

அதில் எந்த  வாய்ப்பு  அதிர்ஷ்டத்தை தாங்கி வருகிறது
என்பதை கண்டறிந்து பற்றிக்கொள்வதில்  தான்  நம் வெற்றி உள்ளது.

வியாழன், நவம்பர் 03, 2011

உனக்காக...

மன இறுக்கத்தில்  இருக்கும் உனக்கு
நான்(உலகம்) உதிரும் சில வரிகள்.

வெளியே மழை ...

ஒற்றை ஜன்னல்...

இருள் சூழ்ந்த கூடாரம்...

நீ மட்டும் தனிமையில்...

கண்களில் ஆட்பரிக்கும்  நயாக்ராவோடு.

சற்றே வெளியே வா ...

உன்னுடைய மனப்போராட்டத்தை 
என்னிடம் பகிர்ந்துகொள்.

என்னை ஒரு குப்பை தொட்டியாக நினைத்து உன் மனதை தைக்கும் விஷயங்களை  என்னிடம் கொட்டிவிடு.

உன் நிலை புரிந்து...

நீ ஏன் இப்படி? என்று நான் உன்னை கேட்டதை காட்டிலும்
நான் ஏன் இப்படி? என்று நீயே உன்னை கேட்கும் பொழுது தான் 
உன் மனத்தினுடைய  வலி என்னை அதிகமாக கனக்க செய்கிறது.

உன்னுடைய தோல்வி(இழப்பு) உன்னையே உனக்கு புரிய வைக்க
ஒரு சந்தர்ப்பமே.

இழப்புகள்  இல்லா  மனிதன் இவ்வுலகில் இல்லை.

இழப்புகள் இல்லை  எனில் அவன் தன் வாழ்நாளில் எந்த ஒரு
செயலையும் செய்ய  முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை.

இவ்வுலகில் மோசமான  ஒன்று என்னவென்றால் உன்னையே நீ
தாழ்த்தி கொண்டு வருத்தப்படுதல் தான்.

வலி  கண்டு விரக்தி கொள்ளாதே...


சூழல் ஒருபோதும்  உன்னை  உருவாக்குவதுமில்லை,
காயப்படுத்துவதுமில்லை.

எனது பெரிய மாற்றத்தை உன்னிடமிருந்தே  எதிர்ப்பார்க்கிறேன்.

இதோ உனக்கான என் வார்த்தைகள்...
. மற்றவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை தேர்ந்தெடுக்கட்டும்.

    நீ அல்ல...
மற்றவர்கள் சற்றும் பொருந்தாத  விஷயங்களுக்காக
    விவாதம் செய்யட்டும்.

    நீ அல்ல...
. மற்றவர்கள் சிறு வருத்தங்களுக்காக  கண்ணீர் சிந்தட்டும்.

    நீ அல்ல...
. மற்றவர்கள் தங்களது வாழ்க்கையை பிறர் கையில் ஒப்படைக்கட்டும்.

    நீ அல்ல...


சந்தோஷம் என்பது நீ எப்படி இருக்கிறாய்,கையில் என்ன கொண்டுள்ளாய்
என்பதிலில்லை.நீ என்ன நினைக்கிறாய் என்பதில் தான்.


உன்னை  சார்ந்தவர்களால்  காலம் தாழ்த்தி வரும் சந்தோஷத்திற்காக காத்திராதே.

இன்றே,ஒவ்வொரு கணப்பொழுதின்  சந்தோஷத்தையும்
உன்னுடையதாக ஆக்கிகொள்.

இல்லையேல்...

இன்றிலிருந்து இருபது  வருடங்கள் கழித்து வருத்தப்பட  கூடும்
இன்று  நீ வாழ மறந்த வாழ்க்கை நினைத்து.

இவ்வுலகில் உனக்கு ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே.
அது கையில் உள்ள உன்னுடைய இப்போதைய வாழ்க்கையே.

முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில்  மட்டுமே காணப்படும்
ஒரு வார்த்தை.

உனது வெற்றியின் முதல் ரகசியம் உன் மீது  நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை விட உன் மீது நீ வைத்திருக்கும் விருப்பமே.

உன்னால் முடிந்த விஷயங்களை செய்ய துவங்கும்போழுது
உனக்கான வெற்றி உறுதி.

காலம் தாழ்த்தாதே,இன்றே துவங்கு..

எவருடைய வாழ்க்கையிலும் "முக்கியமில்லா நாள்" என்ற ஒன்று கிடையாது.

ஒன்று தெரியுமா?

நீயும்  நானும்  மட்டுமே முடிவில்லா வாய்ப்புகளை உருவாக்க
பிறந்தவர்கள்.

நாம் இருவர் மட்டுமே அனைத்து வாய்ப்புகளும்  சாத்தியமாகும் உலகில் வாழ்கிறோம்.

எனவே அனுபவங்களை சேமித்து வை.

அவமானங்களை அல்ல.

ஒரு நாளில் மூன்று முறையாவது இன்று உனக்கு எது முக்கியமானது என்று உனக்குள் கேட்டுப்பார்.அன்றைய தினத்தின் முக்கியத்துவம் புலப்படும்.

எளிமையாக நடந்த்துகொள்.அது தான் உன்னை நிலைபடுத்தும்  உன் அறிவின் சாவி.

முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஒரு போதும் தன் மரணம் கண்டு அஞ்சுவதில்லை.

 எனவே,உன் இழப்புகளை தவிர்த்து கடைசி நிமிடம் வரை உன் வாழ்க்கையை உன் வசப்படுத்து.